கிளிநொச்சியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணி தனி நபரால் அபகரிப்பு! ஏ9 வீதியில் போராட்டம்
Share
கிளிநொச்சி…
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன் பற்று கிராமத்தில் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் காணியினை தனிநபர் ஆக்கிரமித்தமைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் சோரன்பற்று கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கரந்தாய் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
இதில் பால் பண்ணை மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் என பல்வேறு தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டதாகவும் இதில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியினை தனிநபர் ஒருவர் அடாத்தாக பிடித்துள்ளார்.
அத்துடன் அந்த காணிகளில் அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணிக்கு ஏ9 வீதியின் கரந்தாய் பகுதியில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது அபகரிக்கப்பட்ட காணியை மீளப்பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பாளர் கோ.றுசாங்கனிடம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.