முல்லைத்தீவில் மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
Share
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை, தேசிய பாடசாலையாக மாற்றுமாறு கோரி, அப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பொற்றோர்களால், இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையானது, அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பெயர் பட்டியலுக்குள் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றுக் காலை 8 மணிக்கு பாடசாலை முன்பாக கூடிய பெற்றோர்கள, குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் பாடசாலை தேசிய பாடசாலைக்கு உள் வாங்குவதற்கான சகல தகுதிகள் இருந்தபோதும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பட்டியலில் இந்தப் பாடசாலை உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவித்த பெற்றோர்கள், இது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வெண்டுமென்றும் கோரினர்.
அண்மையில், மாவட்டச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய போது, இந்தப் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த போதும், தற்போது இந்தப் பாடசாலை குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எவ்வாறு எனவும், பெற்றோர்கள் வினவினர்.
இதன்போது, பாடசாலை அதிபரைச் சென்று சந்தித்த பெற்றோர்கள், போராட்டம் நடத்துகின்ற வீதிக்கு வருகை தந்து, இதற்கான காரணங்களை கூறுமாறு கோரினர்.
அதற்கு பதிலளித் அதிபர், தன்னால் உரிய தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியாது என்றும் கூறினார்.
இதையடுத்து, பெற்றோர்கள் குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வருகைதந்து, இதற்கான பதிலை வழங்க வேண்டும் எனக் கோரி, பாடசாலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட்னர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காலை 7 மணிக்கு முன்னதாகவே பாடசாலையின் இரண்டு வாயிலுக்கும் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாடசாலை வளாகத்துக்குள் பெற்றோர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.